வடக்கு மாகாண சபைத் தேர்தல் அனைத்து மாகாண சபைகளோடும் இணைந்து அடுத்த வருடம் பெப்ருவரி மாதம் நடைபெறுவதே சாத்தியமானது.

ஓய்வு பெற்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பாரா ?
இப்படியொரு ஐய வினா சமூக வலைத் தளங்களில் பரவலாக எழுகின்றது.
மா.இளஞ்செழியன் தமிழ்த் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக நிற்கவே மாட்டார்.
காரணங்கள்.
01. பலமான வாக்கு வங்கியை வைத்துள்ள அதே வேளை மாகாண முதலமைச்சர் பதவியைப் பெறுமளவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்குகள் இல்லை.
இதன் தலைவர் சுமந்திரன் தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனப் பகிரங்கப்படுத்தி விட்டார்.
02. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் கஜேந்திரகுமாரின் சைக்கிள் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தை விட்டால் வடக்கின் ஏனைய 04 மாவட்டங்களிலோ கிழக்கிலோ செல்வாக்கு இல்லவே இல்லை.
ஆகவே கஜேந்திரகுமாரின் தோற்கப் போகும் குதிரையில் இளஞ்செழியன் பந்தயம் கட்டுவாரா ?
03. போர் முடிந்து 2013 இல் மக்கள் தீவிர தமிழ்த் தேசிய உணர்வில் இருந்த போது வடக்கு மாகாணசபைத் தேர்தல் வந்தது.
மாவை சேனாதிராசா தான் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க கடுமையாக முயன்றார்.ஆனால் சம்.சும் கூட்டணி கொழும்பிலிருந்து நீதியரசர் விக்னேஸ்வரனை இறக்குமதி செய்தார்கள்.
அனந்தி சசிதரனையும் இறக்கப் பெரும் அலையொன்று அடித்தது. சபையின் 38 ஆசனங்களில் ஒரு 24 ஆசனங்கள் கிடைக்குமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணித்தது. ஆனால் 30 ஆசனங்கள் எனும் அதிசய வெற்றியைக் கொடுத்தார்கள்.
04. பெரும்பான்மை வாக்காளரது ஆதரவைப் புறம் தள்ளினார்கள். 05 மாகாண அமைச்சர்களுடன் தொடங்கிய சபை 09 அமைச்சர்களுடன் ஆட்சியை நிறைவு செய்தது. இதனால் இம்முறை தமிழ்த் தேசியம் பேசுவோரை எவ்வளவு தூரம் ஆதரிப்பார்கள்.
05. நீதிபதி மா. இளஞ்செழியன் தொடர்பான மாறுபட்ட அபிப்பிராயங்கள் நீதித்துறையை நன்கு தெரிந்தோரிடம் குறிப்பாக ஊடகத்துறை சார்ந்தோரிடம் உள்ளது.
ஆகவே அவர் தேர்தலில் நின்றால் அந்த மாறுபட்ட அபிப்பிராயங்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாகத் தாராளமாகப் பரவி விடும்.
அதை அவர் நன்கு அறிந்து இருப்பார். அதனால் போட்டிக்கு வரவே வாய்ப்பு இல்லை.
06. நாடு தழுவி இப்போதுள்ள அலையில் NPP கட்சி சாதாரண பெரும்பான்மையுடன் வடக்கு முதலமைச்சர் பதவியைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தரப்புகள் NPP யைப் பொது எதிரியாகச் சித்திரித்து நின்றபோதும் NPP ஐ முழுதாகத் தோற்கடிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி 307,657 வாக்குகளைப் பெற்றது. NPP யோ 306,968 வாக்குகளைப் பெற்று மிக நெருக்கமாக இரண்டாம் இடத்தில் நிற்கிறது.
NPP களநிலையில் மிகவும் திட்டமிட்டு இயங்குகின்றது. மக்கள் மத்தியில் வாழ்ந்து மக்களது சேவகனாக வாழும் சிறந்த ஒரு வேட்பாளனை யாவரும் அதிசயிக்கத் தக்க நிலையில் நிறுத்தும் வாய்ப்பு உள்ளது.
மக்களும் நேர்மையான புதுமுகம் ஒன்றையே ஆவலுடன் பார்த்து நிற்கின்றனர். பெரிய பதவி வகித்தோரையல்ல.